சென்னை

சென்னை – அயோத்தி விமான கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த மாதம் 22 ஆம் தேதி அன்று உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கோவில் கும்பாபிஷேகம் நடத்தி, பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தினமும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமானச் சேவை கிடையாது. லக்னோ சென்று அங்கிருந்து அயோத்திக்குச் செல்ல வேண்டும். எனவே நேற்று முதல் சென்னையில் இருந்து அயோத்திக்குத் தினசரி நேரடி விமானச் சேவையை ஸ்பைஜெட் விமான நிறுவனம் தொடங்கியது.

சென்னையில் இருந்து மதியம் 12.40 மணிக்குப் புறப்படும் விமானம், மாலை 3.15 மணிக்கு அயோத்தி விமான நிலையம் சென்றடையும். அதேபோல அயோத்தியில் இருந்து மாலை 4 மணிக்குப் புறப்படும் விமானம், சென்னைக்கு மாலை 6.20 மணிக்கு வந்து சேரும்.

வடமாநிலங்களில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக நேற்று முதல் விமானம் பகல் 12.40 மணிக்குப் பதிலாக 2 மணிநேரம் தாமதமாக மதியம் 2.45 மணிக்கு 163 பயணிகளுடன் அயோத்திக்குப் புறப்பட்டு சென்றது. முதல் விமானத்தில் அயோத்திக்குச் சென்ற பயணிகளை விமான நிறுவன அதிகாரிகள் வரவேற்றனர். பயணிகள் அயோத்திக்கு நேரடி விமானச் சேவை மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக பயணிகள் தெரிவித்தனர்.

கடந்த 13 ஆம் தேதி ம்தல் சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான கட்டணம், வரிகள் உள்பட ரூ.6,499 என முடிவு செய்து முன்பதிவு செய்யப்பட்டது. ஏராளமானோர் அயோத்திக்கு நேரடி விமானச் சேவை தொடங்கியதும் முன்பதிவு செய்ய தொடங்கினர். முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் சில மணி நேரங்களில் விமான கட்டணம் பல மடங்கு எகிறியது.

நேற்று முதல் விமானத்தில் 163 பயணிகள் சென்றாலும் சில இருக்கைகள் இருந்தன. ரூ.27 ஆயிரம் வரை கட்டணமாக இருந்ததால் அயோத்திக்கு விமானத்தில் செல்லலாம் என்று முடிவு செய்திருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.  பயணிகள் முன்பதிவு தொடங்கி விட்டதால் குறைந்த கட்டணத்தில் இருந்த பெரும்பாலான இருக்கைகள் நிரம்பி விட்டன. தற்போது கூடுதல் கட்டண இருக்கைகள் மட்டுமே உள்ளன.