சென்னை:
ள்ளி சீருடையில் வரும் மாணவர்களை பேருந்தில் அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்து, நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால், கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதன்பின், மாணவர்கள் நலன் கருதி பள்ளி திறப்பு குறித்து அரசு பரிசீலினை மற்றும் ஆலோசனை மேற்கொண்டு பள்ளி திறப்பு தேதியை தள்ளிவைத்தது. அதன்படி, கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் ஜூன் 7-ம் தேதி திறக்கப்பட உள்ளன. இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வளாகங்களிலும் தூய்மை பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பள்ளி சீருடையுடன் வரும் மாணவர்களை இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அரசுப் பேருந்து நடத்துநர்களுக்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு கட்டணமில்லா புதிய பேருந்து வசதி வழங்கும் பணிக்கான கால அளவை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை காண்பித்து அரசு பேருந்துகளில் பயணம் செய்யலாம். இதுபோன்று கல்லூரி மாணவர்களும் கடந்த ஆண்டின் பயண அட்டையை காண்பித்து பேருந்தில் பயணம் செய்யலாம் எனவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், சீருடை அணிந்திருந்து அல்லது அடையாள அட்டைகளை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டால் நடத்துநர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் ஜூன் முதல் வாரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.