சென்னை: குடும்ப பிரச்சினை காரணமாக, வீட்டை விட்டு வெளியேறிய கணவனை தேடி வந்த இளம்பெண் ஒருவர், தனது  டீனேஜ் மகன், மகளுடன் கோவை அருகே ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர்  விநாயகமூர்த்தி (வயது 50). இவரது மனைவி வரலட்சுமி (வயது 45), மகன்  யுவராஜ் (16) என்ற மகனும் ஜனனி (15) என்ற மகளும் உள்ளனர். இந்த குடும்பத்தில் போதைய வருமானம் இல்லாததால், கணவன் மனைவி இடையே தகராறு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து,  கடந்த இரு மாதங்களுக்கு  முன்பு விநாயகமூர்த்தி திடீரென வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.  அவர் இதுவரை வீடு  திரும்பாத நிலையில், இது தொடர்பாக வரலட்சுமி அளித்த புகாரின் பேரில் போலீஸார் விநாயகமூர்த்தியைத் தேடி வருகின்றனர்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான  வரலட்சுமி, சென்னை வீட்டை காலி செய்துவிட்டு,  தனது இரு டீனேஜ் குழந்தைகளுடன் வேலை தேடி கேரள செல்வதற்காக ரயிலில் சென்றுள்ளார். இவர் சென்ற  ரயில் கோவை போத்தனூருக்கு முன்பாக வரும் போது, அவர்களது உடைமைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வரலட்சுமி, இது தொடர்பாக கோவை போத்தனூர் இருப்புப் பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உடைமைகளும் இல்லாமல், உணவு வாங்குவதற்கு பணமும் இல்லாமல் மூவரும் கடுமையாக தவித்து வந்துள்ளனர். இதனால்  அங்கிருந்து திரும்பி கோவைக்கு எப்படியாவது சென்று விடலாம் என தண்டவாளத்திலேயே நடந்து, மூவரும் போத்தனூரில் இருந்து கோவை வந்துள்ளனர்.  வரும் வழியில் ஒரு இடத்தில் உணவு வாங்கி சாப்பிட்டுவிட்டு, தண்டவாளம் ஓரே சோகமாக அமர்ந்திருந்த நிலையில்,  நேற்று மாலை, திடீரென அந்த வழியே வந்த பயணிகள் ரயில்முன்பு பாய்ந்து 3 பேரும் தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவை இருப்புப் பாதை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையைச் சேர்ந்த  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.