சென்னை: போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல், விதிகளை மீறி வாகனம் ஓட்டியதற்காக 2,546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 763 வழக்குகளுக்கு ரூ.3,81,500 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகரில் போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்தும் வாகன ஓட்டிகள் தவறான வழியில் வகையில், போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், விபத்துகளை குறைக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாகன ஓட்டிகள் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்காமல் தவறான வழியில் வாகனங்களை ஓட்டுவதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பது கவனிக்கப்பட்டது. இதன் காரணமாக விதி மீறல்களை கட்டுப்படுத்த பெருநகர போக்குவரத்து காவல் துறையினரால் சிறப்பு வாகன தணிக்கை நேற்று (30.01.2023) சென்னையில்
நடத்தப்பட்டது.

இந்த தணிக்கையில், தவறான வழியில் வாகனம் ஓட்டியதற்காக மொத்தம் 2,546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 763 வழக்குகளுக்கு ரூ.3,81,500 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த தணிக்கை மேலும் தொடரும் . இது சம்பந்தமாக அனைத்து வாகன ஓட்டிகளும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.