சென்னை

சென்னையின் அனைத்து சுரங்கப்பாதைகளிலும் தற்போது போக்குவரத்து சீராகி உள்ளது.

சென்னையில் பல பகுதிகள் `மிக்ஜம்’ புயல் காரணமாகப் பெய்த மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்த மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

புயல் மற்றும் கனமழையின் போது சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சென்னையில் உள்ள சுரங்கப் பாதைகள் அனைத்திலும் முழுவதுமாக மழை நீர் தேங்கியதால் பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டன.

தற்போது சென்னையில் உள்ள சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழை நீர் மற்றும் குப்பைகள் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளன. ஆகவே சென்னையில் மொத்தம் உள்ள 22 சுரங்கப் பாதைகளின் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு பல்வேறு சாலைகளில் போக்குவரத்து சீராகியுள்ளது.