ராமேஸ்வரம்

கடும் கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடிக்குச் செல்லச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடல் பகுதி ராமேசுவரம் அருகே உள்ளது  தனுஷ்கோடி கடல் பகுதி. இயற்கையாகவே கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் உள்ள பகுதியாகும். நேற்று பகலில் இருந்து வழக்கத்திற்கு மாறாகக் கடல் சீற்றமாகவே இருந்து மாலை 4 மணிக்குப் பிறகும் கடல் சீற்றத்துடனும், கடல் நீர் பொங்கியபடி கடற்கரை மணல் பரப்பை நோக்கியும், சாலை வரையிலும் வந்தது.

மாலை 5 மணிக்குப் பிறகு எம்.ஆர்.சத்திரம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து அரிச்சல் முனை வரையிலும் சுமார் 10 கி.மீ. தூரத்திற்குக் கடற்கரைப் பகுதி முழுமையாகக் கடல் நீரால் சூழ்ந்தது.  இங்கு ஏற்கனவே புயலால் அழிந்த கட்டிடங்கள் இருந்த பகுதி வரை, கடல் நீர் புகுந்தது. இதனால் கடலுக்குள் இருந்த ஏராளமான நண்டுகள் கரைப்பகுதிக்கு வந்து முகாமிட்டன.

தனுஷ்கோடியில் கடல் சீற்றமாக இருப்பதால், தடுப்புச்சுவரும், சாலையும் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது என மீனவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.  தனுஷ்கோடி பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் கடல் சீற்றத்தால் சாலை முழுவதும் தடுப்புச் சுவரின் கற்கள் பெயர்ந்தும் கடலில் உள்ள பாசி மற்றும் தாழை செடிகளும் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன.

தனுஷ்கோடி பகுதியில் 5 அடி உயரத்திற்கு அலைகள் எழும்புவதால், அங்கு சுற்றுலா பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை யாரும் தனுஷ்கோடிக்குச் செல்லவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  ஆனால் உள்ளூர் மீனவர்கள் மட்டும் தனுஷ்கோடிக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கடல் சீற்றம் இருக்கும்போது பலத்த சூறாவளிக் காற்று வீசும் என்றாலும் தற்போது ராமேசுவரம் தனுஷ்கோடி பகுதியில் காற்று வீசாத நிலையில் கடல் சீற்றம் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.