கோவை:
றத்தாழ 9 மாதங்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் அருவியில் பொதுமக்கள் குளிக்க இன்று (டிச. 27) முதல் அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட வன அலுவலர் து.வெங்கடேஷ் தெரிவித்தார்.

கரோனா பரவல் காரணமாக கோவையில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால், போதிய நீர்வரத்து இருந்தும், கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், 9 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் கோவை குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் து.வெங்கடேஷ் கூறியதாவது: கோவை குற்றாலத்துக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிக்கும், நுழைவுக்கட்டணம் செலுத்தும் முன்பு வெப்பநிலைமானியைக் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்துவரவேண்டும். முகக்கவசம் இல்லாமல் வருவோர், டிக்கெட் கவுன்ட்டரில் விற்கப்படும் முகக்கவசத்தை வாங்கி அணிந்து கொண்ட பிறகே, உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

சாடிவயலில் இருந்து கோவை குற்றாலம் செல்லும் வாகனத்தில் ஏறும் முன்பு, அங்கும் ஒவ்வொரு பயணிக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். பின்பு, சானிடைசரைக் கொண்டு கைகளை சுத்தம் செய்து கொண்டு, வாகனத்தில் ஏற வேண்டும். இந்த விதிகளைக் கடைப்பிடித்து, கரோனா பரவலைத் தடுக்க வனத் துறைக்கு சுற்றுலாப் பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.