சென்னை: அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு அளிப்பதை உறுதி செய்யும் வகையில், அதை  கண்காணிக்க 9 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016-இல் வலியுறுத்தப்பட்டுள்ளதன்படி, தமிழக அரசு பணிகளுக்கான  வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீட்டினை வழங்க ஏதுவாக உகந்த பதவியிடங்கள் கண்டறியப்பட்டு பணிநியமனம் கண்காணிக்கும் பொருட்டு உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில், முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் நடைமுறையில் உள்ள 4% இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும், வேலை வாய்ப்பு வழங்குவதை உறுதி செய்திடும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்ட குழுவினை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த குழு உறுப்பினர்களாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர்கள், மனிதவள மேலாண்மை துறை செயலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் உள்ளிட்ட இடம் பெற்றுள்னர்.

இக்குழுவானது அனைத்து அரசு துறைகள்,அரசு சார்பு நிறுவனங்கள்,பொதுத்துறை நிறுவனங்கள்,கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் வழங்கப்படும் வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு அளிக்கப் படுவதை கண்காணிக்கும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு நிரப்பப்படாத பட்சத்தில், அப்பணியிடங்கள் அடுத்த ஆண்டிற்கு முறையாக முன்கொணரப்படுகின்றனவா (carried forward) என்பதனை கண்காணிக்கும்.

மாற்றுத்திறனாளிகள் பணிபுரிய உகந்த பதவியிடங்கள் கண்டறியப்படுவதையும், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்யப்படுவதை யும் கண்காணிக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.