சென்னை

மிழக அரசின் தேர்வுத்துறை நாளை 12ஆம் வகுப்பு மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவுகள் வெளியாகும் என அறிவித்துள்ளது.

 கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வுகள் நடந்து அதன் முடிவுகள் வெளியாகின.   இந்த தேர்வு எழுதிய மாணவர்களில் சிலர் தங்களது விடைத்தாளை மறு கூட்டல் செய்ய மற்றும் மறு மதிப்பிடு செய்ய விண்ணப்பித்திருந்தனர்.   இதன் முடிவுகள் நாளை பிற்பகல் வெளியிடப்படும் எனத் தமிழக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இந்த முடிவுகள் பட்டியலில் உள்ள பதிவு எண்களுக்கான விடைத்தாள்களில் மட்டும் மதிப்பெண்களில் மாற்றம் உள்ளதாகவும் இந்த முடிவுகள் பட்டியலில் இடம் பெறாத பதிவு எண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் பார்க்க முடியும்

இந்த இணைய தளத்தில் தங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களது திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் வழங்கும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.