சென்னை: சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட்டி போட்டி நிறைவு விழா சென்னை நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் நாளை பிற்பகல் நடைபெற உள்ளதால், சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழா கடந்த 28ந்தேதி (ஜூலை) பிரதமர் மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்ல்  சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளன. இதையடுத்து நாளை போட்டி நினைவு விழா நடைபெறுகிறது. நாளை ( 9-ந்தேதி)  மதியம் 3 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கத்தில்  நிறைவிழா கோலாகலமாகநடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்அமைச்சர், அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சார்ந்த செஸ் வீரர்-வீராங்கனைகள், சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இதையொட்டி சென்னையின் பல சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருப்பதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. அதன்படி, நாளை பிற்பகல்  3 மணி முதல் இரவு 9 மணி வரையில் ராஜா முத்தையா சாலை, ஈ.வே.ரா பெரியார் சாலை, சென்டிரல் மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதன்படி தேவை ஏற்பட்டால் மதியம் 1மணி முதல் சூளை நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் ராஜா முத்தையா சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. அத்தகைய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை ஈ.வி.கே. சம்பத் சாலை மற்றும் ஈ.வே.ரா சாலை வழியாக செல்லலாம்.

 ஈ.வி.கே சம்பத் சாலை, ஜெர்மயா சாலைச் சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.  வணிக நோக்கிலான வாகனங்கள் ஈ.வே.ரா சாலை, கெங்குரெட்டி சாலை சந்திப்பு, நாயர் பால சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து சென்டிரல் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

பிராட்வேயில் இருந்து வருகின்ற வணிக நோக்கிலான வாகனங்கள் குறளகம், தங்கச்சாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கித் திருப்பி விடப்படும். இந்த வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாகச் சென்றுத் தங்கள் வழித்தடங்களை அடையலாம்.

எனவே வாகன ஓட்டிகள் மேற்கண்ட சாலை வழித்தடங்களை தவிர்த்து பிற வழித்தடங்களை பயன்படுத்தக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வரவேண்டிய பொதுமக்கள் அவர்களது பயணத்திட்டத்தினை முன்கூட்டியேத் திட்டமிட்டுக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.