டெல்லி: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளது, இதனால், ஒடிசா, மேற்குவங்க மாநிலத்தில் கனமழை முதல் மிகக்கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பாதிப்பு இருக்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. ஒடிசா, மேற்கு வங்க கடலோர பகுதியை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் இந்த காற்றதழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளது.  இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக ஒடிசா பகுதியில் அடுத்த 3 நாட்களுக்கு  கனமழை முதல் மிகக்கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், இதன் காரணமாக, சத்தீஸ்கர், கோவா, மேற்கு மத்தியப்பிரதேசம், கிழக்கு மத்தியப்பிரதேசம், மற்றும் குஜராத் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு தொடர்ந்து கனமழை முதல் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தற்போது உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக எந்த வகையிலும் தமிழகத்திற்கு கனமழை முதல் அதீத கனமழையோ அல்லது ஏதேனும் ஆபத்தோ இருக்காது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.