சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை (14ந்தேதி)  விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  அதன்படி, தமிழகத்தில் சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து பதிவுத் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

  தமிழகத்தில் சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ஜன.14ஆம் தேதி (நாளை) ஒருநாள் செயல்பாட்டில் இருந்து விலக்களித்து விடுமுறை வழங்க, தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்திடம் இருந்து கோரிக்கை வந்தது. இதை ஏற்று 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை அலுவலக செயல்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து பத்திர பதிவுத் துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு 14.01.2023 சனிக்கிழமை அன்று ஒருநாள் மட்டும் செயல்பாட்டில் இருந்து விலக்கு அளித்தும், தைப்பூசம் 05.02.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நிகழ உள்ள நிலையில் அன்றைய தினம் மாநிலத்தில் செயல்படும் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் இயங்கிட ஏற்கனவே அரசால் அனுமதி அளிக்கப்பட்டு இருந்ததற்கு விலக்களித்தும் உத்திரவிடுமாறு தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கத்திடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று, மேற்கூறிய 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு 14.01.2023 (சனிக்கிழமை) அன்று செயல்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

மேலும், மாநிலத்தில் செயல்படும் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் 05.02.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தைப்பூசத்தை முன்னிட்டு இயங்கிட ஏற்கனவே அரசால் அனுமதி அளிக்கப்பட்டு இருந்ததற்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.

இவ்விரண்டு தினங்களைத் தவிர இனிவரும் சனிக்கிழமைகளில் மேற்சொன்ன 100சார் பதிவாளர் அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.