சென்னை

பாளையங்கோட்டை மற்றும் புழல் சிறைகளில் இன்று காலை முதல் காவல்துறையினர் திடீர் சோதனையிட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சென்னை புழல் மற்றும் பாளையங்கோட்டை சிறைகள் மிகவும் பெரியவை ஆகும்.  பொதுவாக அனைத்து சிறைகளிலும் ஆயுதங்கள், கஞ்சா, அலைப்பேசி போன்ற பல பொருட்கள் வைத்திருக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளன.  ஆயினும் கைதிகள் அவற்றை ஒளித்து வைத்து பயன்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளன.

இதையொட்டி சென்னை புழல் சிறை மற்றும் பாளையங்கோட்டை சிறை ஆகிய இடங்களில் இன்று காலை காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.  இதனால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   காவல்துறையினர் சிறைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளனவா எனச் சோதனையிட்டு வருகின்றனர்.

சென்னை புழல் மத்திய சிறையில் மாதவரம் துணை ஆணையர் தலைமையில் 100 காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  இதைப் போல் பாளையங்கோட்டை சிறையில் உதவி ஆணையர்கள் விஜயகுமார் மற்றும் சேகர் தலைமையில் 45 காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.