டில்லி

ன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்துள்ள மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது ‘மோடி’ பெயர் தொடர்பாகக் கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது குஜராத்தைச் சேர்ந்த பாஜக  சட்டமன்ற உறுப்பினர். புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது.  எனவே அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. சூரத் மாவட்ட நீதிமன்றம் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது.

தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த 7-ந்தேதி தள்ளுபடி செய்து. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டரீதியாக சரிதான் எனக்கூறி அதை நிறுத்தி வைக்க எவ்வித முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்தது.

இதையொட்டி ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்   அவருக்கு அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 18-ந்தேதி ஆஜரான மூத்த வழக்குரைஞர் சிங்வி, இந்த மனுவை 21  அல்லது 24-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என முறையிட்டார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இதை ஏற்று, ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு 21-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. வழக்கை நீதிபதிகள்  பி.ஆர்.கவாய், பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்குத் தடை விதிக்கப்பட்டால் அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர். பதவியை பெற முடியும் என்பதால் இந்த தீர்ப்பைக் காங்கிரசார் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.