டில்லி

ன்று உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி கைது குறித்த மேல் முறையீட்டு மனு மீது விசாரணை நடைபெற உள்ளது.

அமலாக்கத்துறையால் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் 3-வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.  3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கூறிய தீர்ப்பில், செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது; ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல, அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டார்.

தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியைக் காவலில் எடுக்கும் என்பதால் மேகலாவின் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி முறையிட்டார்.

மேலும் அமலாக்கத்துறை சார்பிலும் ஒரு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு அதை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட வேண்டும் என அமலாக்கத் துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.

தலைமை நீதிபதி அமலாக்கத்துறையின் வாதத்தை நிராகரித்ததுடன், மேகலாவின் மேல்முறையீட்டு மனுவை இன்று  விசாரணைக்குப் பட்டியலிட்டு உத்தரவிட்டார்.  இன்று நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, சுந்தரேஷ் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.