திருப்பூர்

பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்து பல்லடத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்கிறார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வந்தார். இன்று இதன் நிறைவு நிகழ்ச்சி திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெறுகிறது. இதையொட்டி அவர் இன்று காலை 9 மணிக்குத் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனது பயணத்தைத் தொடங்குகிறார்.

அண்ணாமலை பல்லடம் மாதப்பூரில் நடக்கும் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்ட மைதானத்துக்கு செல்கிறார். கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேச உள்ளார். இன்று பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் மதியம் 2.05 மணிக்குக் கோவை மாவட்டம் சூலூர் விமானப் படைத் தளத்திற்குச் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு 2.35 மணிக்கு பல்லடம் வருகிறார்.

பிறகு அங்கிருந்து மாதப்பூரில் நடக்கும் பொதுக்கூட்ட மேடைக்கு வாகனத்தில் செல்கிறார். பிரதமர் மோடியும், அண்ணாமலையும் ஒரே வாகனத்தில் ஊர்வலமாகப் பொதுக்கூட்ட மேடைக்குச் செல்கிறார்கள். பிரதமர் மோடி மதியம் 2.45 மணி முதல் 3.45 மணி வரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார்.

பிறகு பிரதமர் மோடி மாலை 5 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை செல்கிறார். அவர் மதுரையில் தனியார்ப் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.  அன்று இரவு மதுரையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார்.

மறுநாள் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாகத் தூத்துக்குடியில் நடக்கும் புதிய திட்டங்கள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். நெல்லையில் காலை 11.15 மணி முதல் 12.15 மணி வரை நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.  பிபு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் செல்ல உள்ளார்.

பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தையொட்டி திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் உள்ள மைதானம் முழுவதும் 5 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள்.  இங்கு 3 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பல்லிடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.