துரை

லியோ படக் குழுவினர் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. 

சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ படம் வெளியானது.  வர்த்தக ரீதியாக வெற்றி பெற்ற இந்த படத்தில் ஏராளமான வன்முறைக் காட்சிகள்  இடம்பெற்றதாக விமர்சகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில்  மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ராஜாமுருகன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு  தாக்கல் செய்துள்ளார்.

அதில்,

“சமீபத்தில் வெளியான நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்த லியோ என்ற திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.  படத்தில், வன்முறை, சட்ட விரோத செயல்கள், கார், இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, காவல்துறை உதவி இருந்தால் அனைத்து குற்றங்களையும் செய்ய முடியும் என்பன போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

எனவே வன்முறையைத் தூண்டும் வகையில் காட்சிகளை இடம் பெறச்செய்த காரணத்துக்காக லியோ படக்குழுவினர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” 

என்று கூறப்பட்டு இருந்தது.

நேற்று இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால், வழக்கு விசாரணையை இன்றைக்கு  நீதிபதிகள் ஒத்திவைத்தனர். எனவே இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.