டில்லி

வ்வொரு வருடமும் மார்ச் மாதம் 22ஆம் தேதி உலக நீர் தினமாக கொண்டாடப்படுகிறது.

உலகெங்கும் மார்ச் மாதம் 22 ஆம் தேதி உலக நீர் தினம் என கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த வருடம் இது இயற்கையும் நீரும் என்னும் தலைப்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.   இதற்காக உருவாக்கப்பட்ட இணைய தளம், “தற்போதைய நிலையில் இயற்கை முறையில் நாம் நீர் சேகரிப்பை மேற்கொள்ள வேண்டும். மற்றும் பசுமை மயமாக்கல் மூலமும் நீர் சேகரிப்பு செய்ய முடியும்.   புதிய மரங்களை நடுதல், நதிகளை இணைத்தல் போன்ற செயல்களும் அவசியம்” என கூறுகிறது.

இந்த உலக நீர் தினத்தில் நீர் பற்றிய முக்கிய செய்திகள் இதோ :

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைப்படி உலகில் 2.1 பில்லியன் மக்களுக்கு அதாவது 210 கோடி பேருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை.   இவர்களில் 84.4 கோடி பேருக்கு அடிப்படை குடிநீர் வசதிகளே கிடையாது.  26.3 கோடி பேர் குடிநீருக்காக தினமும் 30 நிமிடம் பயணம் செய்து குடிநீர் பிடித்து வருகின்றனர்.

வீடுகளில் குடிநீர் வசதிகள் இல்லாதவர்கள் 66.3 கோடி பேர்கள் ஆவார்கள்.

பூமியில் சுமார் 71% பரப்பளவில் நீர் உள்ளது.

உலகின் மொத்த நீர் வரத்து 33.25 கோடி கன மைல்கள் ஆகும்

உலகில் உள்ள நீர் பரப்பில் கடலில் மட்டும் சுமார் 97% நீர் உள்ளதால் நல்ல தண்ணீர் 3% மட்டுமே உள்ளது.

உலகில் உள்ள நீர்வளத்தில் 69% உறைந்த நிலையிலும் 30% நிலத்தடி நீராகவும் உள்ளது.

மொத்த நீரில் சுமார் 0.26% மட்டுமே நிலத்தில் நல்ல நீராக உள்ளது.

வரும் 2050க்குள் உலக நீர்த்தேவை இன்னும் 30% அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கழிவு நீரில் 80% அளவுக்கு சுத்தீகரிக்கப்படாமலே நல்ல தண்ணீருடன் கலக்கப் படுகிறது.

மனிதனின் தவறுகளால் கடந்த 1900 முதல் 71% நீர்நிலைகள் காணாமல் போய் உள்ளன.