இன்றைய  ஆடிப்பூரத்தின் சிறப்பு:
மாதந்தோறும் பூரம் நட்சத்திரம் வந்தாலும், ஆடியில் வரும் பூரம் ஆண்டாளின் அவதாரத்தினால் விசேஷமாகிறது. விஷ்ணு பக்தையாக வாழ்ந்து, ‘சகலமும் அவனே” என அவனுடன் ஐக்கியமானவர். ஆழ்வார்கள் வரிசையை அலங்கரித்து பெண் இனத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் ஆண்டாள். இந்த ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி, ஆடி 26ஆம் தேதி (நாளை) ஆடிப்பூரம் திருநாள் கொண்டாடப்பட உள்ளது.
இத்தினத்தில் அனைத்து உலகத்தையும் படைத்தும், காத்தும், கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு நடத்துவார்கள்.
அம்மனுக்கு வளைகாப்பு :
உலக உயிர்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் அன்னைக்கு ஆடிப்பூர நாளில் வளைகாப்பு நடத்தப்படுகிறது. வளைகாப்பு முடிந்ததும் அன்னையை அலங்கரித்த வளையல்கள் அனைத்தும் பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
அம்மனுக்குச் சாற்றப்பட்ட வளையல்களை வாங்கி அணியும் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
அதேபோல் திருமணமாகியும் குழந்தைப்பேறு இல்லாத பெண்களுக்கு நல்ல மக்கட்பேறு கிட்டும்.
ஆடிப்பூர தினத்தில் அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனுக்குக் கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது நன்மை மட்டுமின்றி புண்ணியத்தையும் தரும்.
என்ன செய்யலாம்?
அன்றைய தினம் வெகு நாட்கள் குழந்தை இல்லாத தம்பதியினருக்கு வீட்டிலேயே முறைப்படி சந்தனம் மற்றும் குங்குமம் நலங்கு வைத்து பெண்ணின் இரு கைகளிலும் வளையல்களை அணிவித்து முறையாக வளைகாப்பு செய்வதன் மூலம் அடுத்த வருடமே அவர்களின் இல்லத்தில் ஒரு குழந்தை தவழும் என்பது அனைவராலும் நம்பப்படும் ஒரு ஐதீகமாகும்.
அன்றைய தினத்தில் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் அம்மன் கோவில்களுக்கு வளையல்கள் வாங்கிக் கொடுத்தும், வளையல்களைக் கோர்த்து வீட்டில் உள்ள அம்மன் படத்திற்கு மாலையாகச் சாற்றி, நைவேத்தியம் படைத்து பூஜை செய்வதும் உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.
ஆடிப்பூர வழிபாட்டின் நன்மைகள் :
எல்லா கோவில்களிலும் அம்பாளுக்கு வளையல் சாற்றுவார்கள், பக்தர்கள் காணிக்கையாகத் தரும் வளையல்களை அம்மனுக்குச் சாற்றிவிட்டு பின்னர் அதை மங்கள பிரசாதமாகத் தருவார்கள். இதை அணிந்து கொண்டாள் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஏழை சுமங்கலிப் பெண்களுக்குப் புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பணம் வைத்துக் கொடுப்பது நல்லது.
ஆடிப்பூரத்தன்று மஞ்சள் தாலி கட்டிக்கொள்ளத் தீர்க்க சுமங்கலியாய் இருப்பார்கள்.
ஆடிப்பூரம் அன்று சக்தி ஸ்தலங்களில் அம்மன் ஆலயங்களில் வழிபட, கேட்கும் வரம் கிடைக்கும். ஆரோக்கியம், செல்வ செழிப்பு உண்டாகும்.
சகல நலங்களையும், உள்ள வளங்களையும், நீங்காத செல்வத்தையும் பெற ஆண்டாள் பாதம் பணிவோம்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்
திருவாடிப்பூரம் திருநாள்.. வளையல்களைக் கோர்த்து.. அம்மனுக்குச் சாற்றி.. வீட்டிலேயே வழிபடுங்கள்.