தூத்துக்குடி

ன்று முதல்வர் மு க  ஸ்டாலின் தென் மாவட்ட வெள்ள பாதிப்பு பகுதிகளில் ஆய்வு நடத்த உள்ளார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி,கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவியதால் அதி கனமழை கொட்டித்தீர்த்தது., திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் அதீத மழை பெய்தது.

கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. வெள்ளம் தற்போது வடிந்து வந்தாலும் மக்கள் பாதிப்புகளில் இருந்து மீளவில்லை. இந்த பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

தென் மாவட்ட மழை பாதிப்பு குறித்து சென்னையில் உள்ள அவசரக்கால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு பாதிப்பு பற்றிய விவரங்கள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வில் 4 மாவட்ட ஆட்சியர்களும் காணொளி வாயிலாகப் பங்கேற்றனர்.

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி செல்கிறார். நேற்று இரவு முதல்வர் மு.க.ஸ்டாலின், தென் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட புறப்பட்டுச் செல்வதாக இருந்தது.  பிறகு அந்த பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  காலை 10.15 மணிக்குத் தூத்துக்குடி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கிறார். அவர் காலை 11.45 மணிக்குத் தூத்துக்குடியைச் சென்றடைகிறார்.

தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்யும் முதல்வர் ஆய்வை முடித்துக் கொண்டு இரவு 9.25 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்டு இரவு 10.40 மணிக்குச் சென்னை வந்தடைகிறார்.