சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு, மேலும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. கடந்த 6-ந்தேதியில் இருந்து தென் மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாளையும் நாளை மறுதினமும்  சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  நாளை நீலகிரி, கோவை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருப்பூரில் ஓரிரு இடங்களிலும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மறுதினமும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.