தூத்துக்குடி

வெள்ள பாதிப்புக்களை ஆய்வு செய்யும் மத்தியக் குழுவினர் இன்று மீண்டும் தூத்துக்குடிக்கு வருகின்றனர். 

 

கடந்த டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதி கனமழை பெய்தது. எனவே தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் பல்வேறு குளங்களும் உடைந்ததால் பெரும்பாலான குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

இந்த வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள், மின்கம்பங்கள் என்று பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் பாழாகி விட்டன.  இதையொட்டி மத்தியக்குழுவினர் தூத்துக்குடிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். குழுவினரின் ஆய்வின் போது மழை வெள்ளம் முழுவதுமாக வடியாததால் பல இடங்களில் சேத மதிப்பை முழுமையாக கணக்கிட முடியவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே முழுமையான சேத மதிப்பை ஆராய்வதற்காக கே.பி.சிங் தலைமையில் 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் மீண்டும் இன்று  தூத்துக்குடிக்கு வருகின்றனர். இன்று காலை 9 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்திய பின்பு தொடர்ந்து 2 குழுக்களாகப் பிரிந்து சென்று மாவட்டம் முழுவதும் 24 இடங்களில் ஆய்வு செய்ய் உள்ளனர்.