சென்னை

மத்தியக் குழு வெள்ள பாதிப்புகளை இன்றும் ஆய்வு செய்ய உள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் மிக்ஜம் புயல் மழை, வெள்ளநீரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. கன மழை காரணமாக ஏராளமான குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கியதால், அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியானது.

நேற்று முன்தினம் மிக்ஜம் புயல் மழை பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக மத்தியக் குழுவினர் தமிழகத்துக்கு வந்து தலைமைச் செயலகத்தில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுடன் ஆலோசனை நடத்தினார்கள்.பிறகு மத்தியக் குழுவினர் வடசென்னை பகுதிகளில் வெள்ளச்சேதம் அடைந்த பகுதிகளைப் பார்வையிட்டனர். தமிழக அரசின் துரித நடவடிக்கைக்கு மத்தியக் குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.

இன்று, 2 ஆவது நாளாகத் தாம்பரம், வரதராஜபுரம், குன்றத்தூர், நசரத்பேட்டை, மாங்காடு, பூந்தமல்லி, முகலிவாக்கம் உள்ளிட்ட மழை, வெள்ளநீர் பாதிப்புகளை மத்தியக் குழுவினர் பார்வையிட உள்ளனர். அத்துடன் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் மத்தியக் குழுவினர் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளனர்.

தங்கள் கள ஆய்வை முடித்துவிட்டு நாளை காலை 11.30 மணிக்குத் தலைமைச் செயலகத்திற்கு வரும் குழுவினர் அங்கு முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். ஆலோசனைக்கு பின்னர் அவர்கள் டில்லிக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.