ஆடி பிரதோஷம்,  சனி பிரதோஷம்;

ஆடி மாத பிரதோஷம் விசேஷம். அதிலும் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் இன்னும் விசேஷம். இன்றைய தினம் 18ம் தேதி சனிபிரதோஷம். பிரதோஷ வேளையில், சிவனாரை நினைத்து வழிபடுங்கள். நம் பாவங்களையெல்லாம் போக்கியருள்வார் ஈசன்.

மாதந்தோறும் பிரதோஷம் வரும். திரயோதசி என்பதே பிரதோஷம். அமாவாசைக்கு மூன்று நாட்கள் முன்னதாகவும் பௌர்ணமிக்கு மூன்று நாள் முன்னதாகவும் வருவதே திரயோதசி. அதுவே பிரதோஷம். ஆக மாதத்துக்கு இரண்டு பிரதோஷம் உண்டு.

ஒவ்வொரு கிழமையில் வருகிற பிரதோஷத்துக்கு ஒவ்வொருவிதமான பலன் உண்டு என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். சோமன் என்றால் சந்திரன். சோம என்றால் திங்கள். சந்திரனுக்கு இன்னொரு பெயர் திங்கள். சந்திரனைப் பிறையெனச் சூடிக்கொண்டிருக்கும் சிவனாரை, திங்கட்கிழமையன்று வரும் பிரதோஷத்தில் பூஜை செய்து வணங்கினால், சிவபதம் கிடைக்கும். இம்மையிலும் மறுமையிலும் நல்ல நிலையை அடையலாம் என்பார்கள்.

இதேபோல், குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷமும் முக்கியத்துவம் வாய்ந்தது. சிவபெருமான், தட்சிணாமூர்த்தி அம்சமாக கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்குப் போதித்தார் என்கிறது புராணம்.

எனவே, குருவாரம் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷத்தில், சிவ பூஜை செய்வதும் விரதமிருந்து, ருத்ரம் ஜபித்தும் வழிபாடு செய்வதும் ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இன்னும் இன்னுமான மகத்துவங்களைக் கொண்டது சனிக்கிழமையில் வரும் பிரதோஷம். சனிப்பிரதோஷம் சர்வ பாவவிமோசனம் என்பார்கள். நம் முன் ஜென்மத்துப் பாவங்கள் உட்படச் சகல பாவங்களையும் போக்குவார். புண்ணியம் செய்த பலன்களை வழங்குவார் ஈசன் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

மேலும் சனிப்பிரதோஷ சிவ தரிசனமும் சிவ வழிபாடும் விரதமும் கிரக தோஷங்களையெல்லாம் நீக்கவல்லவை என்பது ஐதீகம். கிரகங்களால் உண்டான கெடுதல்கள் நீங்கப் பெறலாம். இல்லத்தில் இதுவரை கிழக்கும் மேற்குமாக இருந்த தம்பதி சனிபிரதோஷ வழிபாட்டால், சிவபார்வதியைப் போல் ஐக்கியமாகிவிடுவார்கள். கருத்தொற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது உறுதி.

ஆடி மாதத்தில் வரும் பிரதோஷம் நிறையவே விசேஷம். அம்பாள் வழிபாடுகளைப் பார்த்து சிவனாரை ஆச்சரியப்படுவாராம். அப்படியிருக்க, தன் கணவரைத் தென்னாடுடைய சிவனாரை மகிழ்விக்க, அவரிடம் இருந்து வரங்களைப் பெற, உமையவளே பிரதோஷ பூஜைகள் செய்தாள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.  இன்று18ம் தேதி பிரதோஷம். ஆடிப் பிரதோஷம். சனிப் பிரதோஷம்.அற்புதமான இந்தநாளில், சிவனாரை வணங்குவோம்.

பசுக்களுக்கு உணவளிப்போம். பிரதோஷ பூஜை வேளையான மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில், வீட்டில் விளக்கேற்றுங்கள். அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு, அபிஷேகத்துக்குப் பொருட்கள் வழங்குங்கள். முடிந்தால், வில்வம் கிடைத்தால் வழங்குங்கள். நந்திதேவருக்கு அறுகம்புல் மாலை சார்த்தக் கொடுங்கள்.