சென்னை: பாமகவை முழுமையாக கைப்பற்றுவதில் தந்தை மகனுக்கு இடையே போட்டி நிலவி வரும் நிலையில், கட்சி யாருக்கு சொந்தம் என்பது குறித்து ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பாமகவில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, கட்சியை இரண்டாக்கி உள்ளது. இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் விமர்சித்து வருவதுடன், கட்சி எங்களுக்கே என்று கூறி வருகின்றனர். இதற்கிடையில், 2025ம் ஆண்டு அன்புமணி பாமக சிறப்பு பொதுக்குழுவை கூட்டி, தன்னை தலைவராக தேர்வு செய்துகொண்டார். இதையடுத்து, ராமதாஸ் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி, புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.
இந்த பரபரப்புக்கு இடையில் 2025ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சேலத்தில் ராமஸ்தாஸ் பாமக பொதுக்குழு கூட்டத்தை கூட்டினார். இந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் பாமகவின் தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். மேலும், அன்புமணியின் பதவிக் காலம் 2025 மே 29 ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டதாகவும் தேர்தல் கூட்டணியை முடிவு செய்யவும் தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும் ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் ஆதரவாக இருக்கிறது. இதற்கு எதிராக ராமதாஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் இன்று வழக்குத் தொடர்ந்துள்ளார். பாமக தங்களுக்கே சொந்தம், கட்சியில் தனக்கே முழு அதிகாரம் என்று உத்தரவிடக் கோரி ராமதாஸ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தாக்கல் செய்துள்ள மற்றொரு ரிட் மனுவில், பாமகவின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த அன்புமணி உள்ளிட்டோருக்குத் தடை விதிக்க வேண்டும், தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க ராமதாஸுக்கு அதிகாரம் என உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஓரிரு நாள்களில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அன்புமணி தரப்பு இணைந்துள்ளது.
ராமதாஸ் தரப்பு திமுகவுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]