சென்னை: தமிழகத்தில் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட, அரசு துறை பணிகளுக்கான  ‘குரூப் – 2’ உள்பட  7வகை தேர்வுகளின் முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன்  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
குரூப் – 2 நேர்காணல் தேர்வு உள்ள பதவிகளில் 1334 காலியிடங்களை நிரப்ப 2019 பிப்ரவரி 23ந்தேதி போட்டி தேர்வானது நடந்தது. அதில் 14 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருகின்ற 19ந்தேதி நேர்காணல் நடைபெறும்.
தமிழக தகவல் தொழில்நுட்ப துறையில் உதவி கணினி ஆய்வாளர் பணியில் 60 பணியிடங்களை நிரப்ப கடந்த 2019 ஏப்ரலில் தேர்வு நடந்தது. இதில் 14 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களின் மதிப்பெண் தரவரிசை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
கைத்தறி மற்றும் ஜவுளி துறையில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 19 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு மற்றும் பள்ளி கல்வித் துறையில் மாவட்ட கல்வி அலுவலரான டி.இ.ஓ. பதவியில் 20 இடங்களை நிரப்பும் தேர்வுக்கான முடிவுகளும் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.
மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான நலன் சார்ந்த நிறுவனத்தில் திட்ட அலுவலர் தமிழ்நாடு சிறைப்பணி உதவியாளர் தொல்லியல் துறை அலுவலர் உள்ளிட்ட தேர்வுகளின் முடிவுகளும் வெளியிடப்பட்டு உள்ளன.
மேற்கண்ட விபரங்களை எல்லாம்.என்.பி.எஸ்.சி.யின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த முடிவுகள் வழியே மொத்தம் 1455 காலியிடங்கள் நிரப்பப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.