சென்னை

மிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பணிகளுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் கிராம அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6244 குரூப் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.  இந்த இடங்களை நிரப்ப  தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

அதன் விவரம் பின் வருமாறு : –

அதன்படி, விண்ணப்பங்கள் இணையம் வழியே மட்டுமே அனுப்பப்பட வேண்டும். இதற்காக விண்ணப்பம் செய்வோர், www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று அறிவுறுத்தல்களை நன்றாகப் படித்து கொள்ள வேண்டும். அவர்கள், தேர்வுக்கான அனைத்து தகுதி வாய்ந்த நிபந்தனைகளையும் பூர்த்தி செய்கிறோம் என உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இணையத்தில் 28.02.2024, இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பம் சரிபார்த்தல் நாள் 04.03.2024, அதிகாலை 12.01 மணியிலிருந்து 06.03.2024, இரவு 11.59 மணி வரை உள்ளது. தேர்வுக்கான நாள் 09.06.2024 எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு காலை 9.30 மணிக்குத் தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது..

04.03.2024 முதல் 06.03.2024 வரையிலான 3 நாட்களில், தேர்வு எழுதுவோர் ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தங்களைச் செய்து கொள்ளலாம். அதன் பின்னர் எந்த அனுமதியும் கிடையாது.

விண்ணப்ப தாரர்கள் தமிழக வனத் துறைக்கு உட்பட்ட வனப் பாதுகாவலர், ஓட்டுநர் உரிமம் பெற்ற வனப் பாதுகாவலர், வன கண்காணிப்பாளர் மற்றும் வன கண்காணிப்பாளர் (பழங்குடியின இளைஞர்) போன்ற பல பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

தேர்வின் போது மொபைல் போன்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை தங்களுடன் கொண்டு வர கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மதிப்பெண் அடிப்படையிலேயே பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.

3 மணிநேரம் நடைபெறும் தேர்வானது 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் 10-ம் வகுப்பு அடிப்படையில் கேள்விகள் இடம்பெறும். பகுதி ஏ-யில் 100 கேள்விகள் (150 மதிப்பெண்கள்) தமிழ் பாடத்தில் கேட்கப்படும்.

பகுதி பி-யில் பொது படிப்புகள் (75 கேள்விகள்), ஆப்டிடியூட் தேர்வு (25 கேள்விகள்) நடத்தப்படும். இதற்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்குத் தேர்வுகள் நடைபெறும். 200 கேள்விகள் இடம் பெறும். அனைத்து சமூகத்தினருக்கும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 90 என உள்ளது. அதற்குரிய இணையதளத்தில் சென்று பிற விவரங்களைப் படித்துத் தெரிந்து கொள்ள முடியும்.