சென்னை: தமிழ்நாட்டில் நாளை பொறியியல் படிப்புக்கான  சிறப்பு பிரிவினர் கலந்தாய்வு தொங்க உள்ள நிலையில், இன்று தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது..பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களில் தகுதியான ஒரு லட்சத்து 39ஆயிரத்து 33 மாணவர்களுக்குத் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பி.இ, பிடெக் பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் இன்று (செப்.14) காலைஇணையதளத்தில் வெளியிடப்பட்டது. tneaonline.org என்ற இணையதளத்தில் தரவரிசை விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

தகுதி வாய்ந்த ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 33 மாணவர்களுக்கு தரவரிசை மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. இந்த  முறை, முதல் முறையாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் படித்த மாணவர்களில் 15ஆயிரத்து 660 பேருக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொதுப்பிரிவில் 15ஆயிரத்து 161 மாணவர்களுக்கும், தொழிற்கல்விப்பிரிவில் 499 பேருக்கும் தரவரிசைப் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளன.

இவர்களுக்கான கலந்தாய்வு வரும் 15ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. நாளை (15ஆம் தேதி)  முதல் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. மாணவர்கள் தங்களின் ஆன்லைன் மூலம் தாங்கள் விரும்பும் கல்லூரியை பதிவு செய்ய வேண்டும்.

பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவில் கலந்துக் கொள்வதற்காக ஒரு லட்சத்து 36ஆயிரத்து 973 மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

இந்த தரவரிசைப் பட்டியலின்படி,  200க்கு 200 மதிப்பெண்களை 13 மாணவர்கள் பெற்றுள்ளனர். 199.5 மதிப்பெண்களை 8 மாணவர்கள் பெற்றுள்ளனர். தொழிற்கல்வி பிரிவில் 2ஆயிரத்து 60 மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 193.955 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை மாணவர் கிஷோர் பெற்றுள்ளார்.

கலந்தாய்வில் பங்கேற்கும் மொத்த மாணவர்கள் – 1,39,033

மாணவர்கள் எண்ணிக்கை – 87,291

மாணவிகள் எண்ணிக்கை – 51,730

மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை – 12

தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் – 1,20,886

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் – 17,121

ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் – 613

பிற மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் – 414

கலந்தாய்வில் பங்கேற்கும் கல்லூரிகள் – 440

கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ள இடங்கள் – 1,51,870.