சென்னை: தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை மாவட்ட தலைவர்களே நீக்கக்கூடாது.  மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை மாவட்ட தலைவர்கள் தாங்களாகவே நீக்குவது செல்லாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட வட்டார, நகரத் தலைவர்களையோ, நிர்வாகிகளையோ, தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளையோ மாவட்டத் தலைவர்கள் தாங்களாகவே நீக்குவது என்பது செல்லாது.

அதேபோல், தங்கள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் கீழ் உள்ள நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளின் செயல்கள் ஒழுங்குமீறல் நடவடிக்கைக்கு உட்பட்டிருக்கும் பட்சத்தில், காங்கிரஸ் அமைப்பு விதிகளின்படி சம்மந்தப்பட்டவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டை மாநில தலைமைக்கும், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிற்கும் முறையாக எழுத்துபூர்வமாக தெரிவிக்க வேண்டும்.  ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணைக்குப் பிறகே, அவர்களின் பரிந்துரையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மாநில தலைமைக்கும், ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கும் தகவல் தெரிவிக்காமல் தாங்களாகவே ஏதேனும் நடவடிக்கை எடுத்திருந்தால், அந்த நடவடிக்கை செல்லாது என்றும், நடைமுறைக்கு வராது என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.