சென்னை: முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தந்தை காலமானதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தந்தையும், முன்னாள் தலைமை காவல்துறை அதிகாரியுமான என்.எல் வெங்கடேசன் காலமானார். இவர் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ராணியின் கணவர் ஆவார்.

இந் நிலையில், என்.எல் வெங்கடேசன் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ராணி வெங்கடேசன் அவர்களின் கணவரும், முன்னாள் தலைமை காவல்துறை அதிகாரியுமான திரு எல்.என்.வெங்கடேசன் அவர்கள் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

எல்.என்.வெங்கடேசன் அவர்கள் காவல்துறையில் படிப்படியாக பல்வேறு உயர்பொறுப்புகளை பெற்று சிறப்பாக செயல்பட்டவர். காவல் துறையினருக்கு முன்மாதிரியாக விளங்கியவர்.

எல்.என்.வெங்கடேசன் அவர்களை இழந்து வாடும் அவரது துணைவியார் திருமதி ராணி வெங்கடேசன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.