தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது என்று கூறி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன் 5 ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

இதில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவுகூறுகிற வகையில் ஆகஸ்ட் 9 முதல் 14 ஆம் தேதி வரை 75 கி.மீ. தூர பாத யாத்திரையை மேற்கொள்ளவது என இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களை மீறுகின்ற வகையிலும், தமிழக அரசின் கொள்கைகளுக்கு விரோதமாக கருத்துகளை கூறி, பா.ஜ.க.வின் ஊதுகுழலாக அவர் செயல்பட்டு வருகிறார் என்றும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிற தமிழக ஆளுநரின் இத்தகைய போக்கை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருள் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எடுத்து கூறுவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் முயற்சிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதை கண்டித்து, ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் மாபெரும் மறியல் போராட்டத்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளதை அடுத்து அன்று கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவது என்று தீர்மானித்துள்ளது.