சென்னை: எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணிக்க 1000 கருவிகள் வழங்கப்படும் என  தமிழகஅரசு அறிவித்துள்ளது. அது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி,  எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணித்திட 85 இலட்சம் ரூபாய் செலவினத்தில் 1,000 எண்ணிக்கையிலான மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சிக் கண்காணிப்பு கருவிகள் வழங்கப்படும் என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகளை செயல்படுத்துவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதாஜீவன் அவர்களால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மானியக் கோரிக்கையின் போது பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்தும் பொருட்டு அரசாணைகள் வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு அரசுகுழந்தைகள் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருவதுடன், அவர்களின் வளர்ச்சி, ஊட்டச்சத்து, சுகாதாரம் ஆகியவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதிசெய்யும் பொருட்டு, சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சரால், 2022-2023 ஆம் ஆண்டிற்கான சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மானியக் கோரிக்கையை (மானியக் கோரிக்கை எண்.45) தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்த போது, ஏனையவற்றுக்கிடையே, பின்வரும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன:-

  • எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணித்திட 85.00 இலட்சம் ரூபாய் செலவினத்தில் 1,000 எண்ணிக்கையிலான மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சிக் கண்காணிப்பு கருவிகள் வழங்கப்படும்.
  • இரத்த சோகையைத் தடுக்க 19 மாவட்டங்களில் தன் சுத்தம், குடற்புழு நீக்கம், கை கழுவுதல் உள்ளிட்ட விரிவான தீவிர விழிப்புணர்வு இயக்கத்தை 4.75 கோடி ரூபாய் செலவினத்தில் நடத்தப்படும்.
  • மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மையங்களில், குழந்தைகளின் முதல் 1000 நாட்கள் குறித்த விழிப்புணர்வை 1.74 கோடி ரூபாய் செலவினத்தில் ஏற்படுத்தப்படும்.

   மேற்காணும் அறிவிப்புகளை செயல்படுத்தும் பொருட்டு, எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணித்திட 85.00 இலட்சம் ரூபாய் செலவினத்தில் 1,000 எண்ணிக்கையிலான மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சிக் கண்காணிப்பு கருவிகள் வழங்கவும், இரத்த சோகையைத் தடுக்க 19 மாவட்டங்களில் தன் சுத்தம், குடற்புழு நீக்கம், கை கழுவுதல் உள்ளிட்ட விரிவான தீவிர விழிப்புணர்வு இயக்கத்தை 4.75கோடி ரூபாய் செலவினத்தில் நடத்தவும் மற்றும் மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மையங்களில், குழந்தை களின் முதல் 1000 நாட்கள் குறித்த விழிப்புணர்வை 1.74 கோடி ரூபாய் செலவினத்தில் ஏற்படுத்தவும் ஆக மொத்தம் ரூ.7.34கோடி நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது