சென்னை

மிழக ஆளுநர் ஆர் என் ரவி முன்னாள் அமைச்சர் பொன்முடிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்துள்ளார். 

திமுக சார்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்முடி, உயர் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.  சென்னை உயர்நீதிமன்றம் அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்தது.

ஆனால் இந்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததால், பொன்முடி மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டார். மேலும் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பையும் திரும்ப பெறப்படுவதாக சபாநாயகர் மு.அப்பாவு அறிவித்தார்.

மீண்டும் பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளதால், அவரை மீண்டும் அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதற்காக, ஆளுநர் ஆர்.என்.ரவிக்குக் கடிதம் எழுதியுள்ளார். ஆளுநர் அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் கடந்த இரு தினங்களுக்கு முன் சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றார்.

அவர் அங்கு பொன்முடி விவகாரம் தொடர்பாகச் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. எனவே தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் காலகட்டத்தில், அமைச்சராக பொன்முடிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பாரா? என்ற சந்தேகமும், சட்டச்சிக்கலும் எழுந்தது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதி உள்ள கடிதத்தில்,

”உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளதே தவிர பொன்முடி குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை; மேலும் திருக்கோவிலூர் தொகுதிக்கு உறுப்பினர் இல்லாமல் இருக்க கூடாது என்பதற்காகத் தீர்ப்பு அளித்திருக்கலாம்.  ஆனால் பொன்முடி மீதான வழக்கு நிலுவையில் உள்ளதால் பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது” 

எனத் தெரிவித்துள்ளார்.