சென்னை:
கோயம்பேட்டை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு என்று மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னையில் தீவிரமாகி வரும் கொரோனா தொற்று பரவலுக்கு கோயம்பேடு மார்க்கெட் ஹாட் ஸ்பாட்டாக திகழ்ந்தது தெரியவந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொடக்கத்திலேயே கோயம்பேடு மார்க்கெட் குறித்து அரசு சரியான முடிவு எடுத்திருந்தால், தொற்று பரவலை தடுத்திருக்கலாம் என்று அனைத்து தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில்,  கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப்படுத்திய அரசு, டாஸ்மாக்கை திறக்கிறது என, தமிழக அரசை மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.