சென்னை

மிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவது குறித்து அறிவிப்பார் என தமிழக அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.

நேற்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு திருச்சியில் உள்ள தேனூரில் ஒரு நிகழ்வில் பங்கு பெற்றார்.   அமைச்சர் திருச்சி மாநகர சாலைகளை நவீன இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யும் பணியைத் தொடங்கி வைத்தார்.   அதன் பிறகு அவரை செய்தியாளர்கள் சந்தித்து கேள்விகள் எழுப்பினர்.

நேரு அவர்களுக்கு அளித்த பதிலில், “முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஏராளமான முறைகேடுகள் நடந்தன.  ஆனால் தற்போது உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் நேர்மையாக நடத்தப்பட்டுள்ளது.   எங்கும் இதைவிட நேர்மையாகத் தேர்தல் நடத்த முடியாது. 

திமுக தேர்தல் நேரத்தில் பல வாக்குறுதிகள் அளித்தது.  அவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.  இந்த வாக்குறுதிகளில் ஒன்றான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் முறைப்படி அறிவிப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.