ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் மாநிலங்களில் இருந்து அனுப்பிவைக்கப்படும் அலங்கார ஊர்திகள் இடம்பெறும்.

இந்த வருடம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வ.உ.சி., வீரமங்கை வேலு நாச்சியார் உள்ளிட்டவர்களின் பெருமையைப் போற்றும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து அனுப்பிவைக்கப் பட்ட அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்தது.

மேலும், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட அலங்கார ஊர்திகளையும் நிராகரித்தது, அரசியல் காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இந்த ஊர்தி இடம்பெற்றது. பின்னர், இந்த ஊர்தி தமிழ்நாடு முழுவதும் மக்களின் பார்வைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்த இந்த அலங்கார ஊர்தி நேற்று முதல் சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, வரும் 23 ம் தேதி வரை நிறுத்திவைக்கப்பட இருக்கிறது.

இந்த ஊர்தியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டார், அப்போது அங்கு குவிந்திருந்த மாணவர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்ட முதல்வர் இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.