சென்னை

த்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ஆன்லைன் வகுப்பில் தவறாக நடந்து கொண்டதால் புதிய நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக புகார் எழுந்தது.   மேலும் அவர் ஆன்லைன் வகுப்புக்கள் நடத்தும் போது வெறும் துண்டுடன் வகுப்புக்கள் நடத்தியதாகவும் மாணவிகள் புகார் அளித்தனர்.   இதையொட்டி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று இது குறித்து தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.  அந்த கூட்ட முடிவில் ஆனலைன் வகுப்புக்களுக்கான புதிய நெறிமுறைகள் குறித்து ஒரு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “கொரோனா பெருந்தொற்று காரணமாகத் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு வகுப்புகள் இணைய வழியாக சுமார் ஓராண்டாக எடுக்கப்பட்டு வருகிறது. ஆனலைன் வகுப்புகளின் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் வரப்பெற்ற சில செய்திகளின் தன்மையைக் கருத்தில் கொண்டு இணைய வழி வகுப்புகளை முறைப்படுத்துவது குறித்தும் அதில் தவறுகள் நடக்கும் பட்சத்தில் அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை செய்வதற்கு இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சமீபத்தில் இணைய வகுப்பு ஒன்றில் நடைபெற்ற சில விரும்பத்தகாத நிகழ்வுகள் குறித்தும் அதன் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.  மீண்டும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறக் கூடாது என்றும் சட்டப்பூர்வமான நடவடிக்கை சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்படும் என்றும் மற்ற பள்ளி கல்லூரிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்குப் பின்வரும் முடிவுகளையும், உத்தரவுகளையும் முதல்வர் அறிவித்துள்ளார்.

”ஆன்லைன் வழியாக நடத்தப்படும் வகுப்புகள் பள்ளியினால் பதிவு செய்யப்பட வேண்டும்.  இப்பதிவினை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இருவரைக் கொண்ட குழுவால் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட வேண்டும்; இணைய வழி வகுப்புகள் நடத்துவது தொடர்பாக முறையான வழிகாட்டுதல்களை வகுத்து வெளியிடப் பள்ளிக் கல்வித்துறை ஆணையர், கல்லூரி கல்வி இயக்குநர், கணினி குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான காவல் அலுவலர்கள், கல்வியாளர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும்.

அக்குழு, மாநிலத்திலுள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லைகள் தரப்படுவதைத் தடுப்பதற்கு உரிய வழிமுறைகளை பரிந்துரைக்கவும் இணையவழி வகுப்புகளை நெறிப்படுத்துவது குறித்தும் வழிகாட்டு நெறிமுறையினை ஒருவார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்துகொள்வோர் மீது “போக்சோ” சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் மாணவ, மாணவிகள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க ஒரு உதவி எண் உருவாக்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், இணைய வகுப்புகள் குறித்து வரும் புகார்களை மாநிலத்தின் கணினி குற்றத் தடுப்புக் காவல் பிரிவில் காவல் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அலுவலர் உடனடியாக பெற்றுச் சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் விசாரித்து துரிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.