சென்னை

மக்களவை தேர்தலில் கூட்டணி  பேச்சுவார்த்தைக்கு 7 பேர் கொண்ட குழுவை தமிழக பாஜக அமைச்த்துள்ளது.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அனைத்துக் கட்சிகளும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.

அவ்வகையில் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி, தேர்தல் பரப்புரை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளன.

தமிழக பாஜகவில், அரசியல் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அனுமதியுடன் கட்சிகளுடன் ஆலோசிக்க மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் , தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மோகன், தமிழக தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி , சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.