சென்னை

விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளை வைத்து வழிபட அனுமதி கோரி தமிழக முதல்வரை தமிழக பாஜக தலைவர் முருகன் சந்தித்துள்ளார்.

 

வரும் 22 ஆம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.   தெருக்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்துவது கடந்த சில வருடங்களாக நடந்து வருகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கத் தமிழக அரசு இதற்குத் தடை விதித்துள்ளது. இந்நிலையில் இன்று தமிழக பாஜக தலைவர் முருகன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் முருகன், ”தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட முதல்வரிடம் அனுமதி கோரினோம்.  அவரிடம் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதாக உத்தரவாதம் அளித்துள்ளோம்.

 தமிழக முதல்வர் அதிகாரிகளுடன் இது குறித்து ஆலோசித்த பிறகு முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.” எனக் கூறினார்.