சென்னை: தமிழக சட்டசபை வரும் 14ம்  தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் மாதம் நடைபெற்றது. ஆனால் கொரோனா காரணமாக, மார்ச் 23ம் தேதியே முன்கூட்டியே சட்டசபை நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டன.

சட்டசபை விதிகளின்படி, 6 மாதங்கள் இடைவெளியில் கூட்டத் தொடர் கூட்டப்பட வேண்டும். அதன்படி, செப்டம்பர் 23ம் தேதிக்குள் மீண்டும் கூட்டத்தொடர் கூட்டப்பட  கூட்ட வேண்டும்.

சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதால், கூட்டத்தொடரை வேறிடத்தில் நடத்தலாமா? எது சரியான இடம்? என்பது பற்றி உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் கடந்த 22ம் தேதி சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந் நிலையில் சட்டசபை வரும் 14ம் தேதி காலை 10 மணிக்கு கூடும் என்று சட்டசபை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

தனிமனித இடைவெளியை கருத்தில் கொண்டு கூட்டமானது கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. 14ம் தேதி காலை 10 மணிக்கு சட்டசபை கூடுகிறது.