சென்னை: கவர்னர் மாளிகையில் நேற்று ஆளுநர் உரைக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் கோஷமிட்டபோது, அதை தடுக்காமல் சபாநாயகர் வேடிக்கை பார்த்தார் என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும் போது சில வார்த்தைகளை படிக்காமல் தவிர்த்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் படிக்காமல் தவிர்த்த வார்த்தைகளை ஆளுநரின் உரையை சபாநாயகர் மொழிபெயர்த்த போது அவர் வாசித்தார். அதில் திராவிட மாடல் என்ற வார்த்தையை ஆளுநர் படிக்கவில்லை. இந்த வார்த்தை மொத்தம் இரு இடங்களில் வருகிறது. மேலும் தமிழ்நாடு என்ற வார்த்தையை ஆரம்பத்தில் ஒரு சில இடங்களில் கூறியிருந்த ஆளுநர் பின்னர் வரும் தனது உரைகளில் This government என கூறியிருந்தார்.

மேலும் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்ற வார்த்தையையும் அவர் தவிர்த்துவிட்டார். அது போல் அண்ணா, பெரியார், கலைஞர், அம்பேத்கர், காமராஜர், சமூகநீதி, சமத்துவம், பெண்ணுரிமை, பல்லுயிர் ஓம்புதல், மதநல்லிணக்கம் ஆகிய வார்த்தைகள் அடங்கிய 65 ஆவது பத்தியை படிக்காமல் ஆளுநர் தவிர்த்துள்ளார். அந்த பத்தியில் இருந்தவை இதோ: “சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம் , பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகிறது” என்ற பத்தி இடம்பெற்றுள்ளது.

அது போல் 64 ஆவது பாயிண்டில் “சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதால் தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. இதனால் பன்னாட்டு முதலீடுகளை ஈர்த்து அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்ற பத்தியையும் ஆளுநர் படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆளுநர் உரையை கவர்னருக்கு அனுப்பி அனுமதி பெற்ற நிலையில், அவர் சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தை அரசியல் கட்சியினர் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆளுநர் மாளிகை தரப்பு விளக்கம் அளித்துள்ளது. அதில், ‘ கவர்னர் உரையில் தயாரிக்கப்பட்டு அந்த உரை கவர்னர் அலுவலகத்திற்கு அனுப்ப பட்ட போதே அதிலுள்ள சில சர்ச்சைக்குரிய விஷயங்களை மாற்றும்படி கவர்னர் அலுவலகம் அறிவுறுத்தியது என்றும் ஆனால் அரசு தரப்பில் உரை அச்சுக்கு சென்றுவிட்டதால் நீங்கள் பேசும்போது அதை மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறியதாகவும் அவ்வாறு மாற்று பேசிய போது திடீரென எதிர்ப்பு தெரிவித்து வேண்டும் என்றே பிரச்சனை செய்ததாகவும் தெரிவித்துள்ளது.

கவர்னர் பேசிக்கொண்டிருக்கும்போது எம்எல்ஏக்கள் கோஷமிட்ட போது சபாநாயகர் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்தார் என்றும் சபையின் வரம்புமீறி முதலமைச்சருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தது சபை விதிகளின்படி இல்லை என்றும் அவை மரபை மீறிய செயல் என்றும் கவர்னர் மாளிகை வட்டாரத்திலிருந்து கூறப்பட்டுள்ளது.

அதாவது,

1. ஆளுநரின் உரையை நீக்குகிறேன் என அவர் அழகாக தமிழில் மேற்கோள் காட்டிய ஔவையாரின் ”வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்” என்கிற வரிகளையும், பாரதியாரின் பாழிய பாரத மணித்திரு நாடு என்கிற கவிதை வரிகளையும், நாட்டுமக்களுக்கு ஆளுநர் தமிழில் சொன்ன ஆங்கில புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகளையும் நீக்கியுள்ளனர்.

ஆளுநர் உரையை ஜனவரி 6அன்று அரசு அனுப்பி வைத்தது. அதில் உள்ள ஆட்சேபகரமான விஷயங்களை ஆளுநர் குறிப்பிட்டு கேட்டு அவைகளை நீக்கச் சொல்லி சொன்னபோது அச்சுக்கு போய்விட்டது நீங்கள் பேசும்போது தவிர்த்து பேசுங்கள் என்று சொல்லியுள்ளனர். (அது ஆவணபூர்வமாக பதிவாகியுள்ளது.) ஆனால் ஆளுநர் சபையில் அதை நீக்கி வாசித்தபோது உடனடியாக சானல்களுக்கு அதை அனுப்பி வைத்தும், ஆளுநர் இருக்கும்போதே ஆளுநர் உரைக்குப்பின் சபை முடித்துவைக்கப்பட வேண்டும் என்கிற சபை மரபை மீறி தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஆளுநர் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.

2. ஜனவரி 12ம் தேதி சுவாமி விவேகானந்தரை நினைவுகூரும் இளைஞர் தினம். அந்த தினத்தை குறிப்பிட்டு சேர்த்து பேசியுள்ளார். இது அவை மரபை மீறிய செயல் அல்ல. ஆளுநர் ஆட்சேபித்த மற்றும் தவிர்க்கப்பட்ட பகுதிகள் அரசாங்கத்தைப் கண்டபடி பெரிதும் புகழ்ந்த பகுதிகள். நடைமுறை வேறாக இருந்ததால் ஆட்சேபித்தார், பேசும்போது தவிர்க்கலாம் என்று சொன்னதால் தவிர்த்தார்.

3. “இந்த அரசாங்கம் வீரம் மற்றும் வீரியம் கொண்ட திராவிட மாடல் ஆட்சியில் தொடரும்” இதை ஆளுநர் சொல்ல முடியாது. முதல்வர் அவர் உரையில் பேச வேண்டியது. கொள்கை, செய்யவேண்டியதை மட்டும் ஆளுநர் உரையில் வைப்பார்கள். இதுபோன்ற அதீத புகழ்சிகளை தவிர்ப்பேன் என்று ஆளுநர் சொல்லிவிட்டார்.

4. இந்த மாநிலம் அமைதி மற்றும் அமைதியின் சொர்க்கமாகத் தொடர்கிறது, வன்முறையிலிருந்து விடுபட்டுள்ளது என்று இல்லாத ஒன்றை பதிய வைப்பதை தவிர்த்தார். தினசரி நியூஸ் சேனல்கள், பேப்பர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை அடுக்காக புகாராக சொல்லும்போது இந்த மாநிலம் அமைதியின் சொர்க்கமாக இருக்கிறது என்பது யதார்த்தம் அல்ல (சமீபத்தில் பொதுகூட்டத்தில் பெண் காவலருக்கு நடந்த பாலியல் சீண்டலில் குற்றவாளிகளை கைது செய்யாமல் பாதுகாத்ததும், பின்னர் எதிர்ப்பு கிளம்பியபின் கைது செய்ததும் நடந்தது)

5. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஏதோ மாநில அரசின் முயற்சியால் மட்டுமே விடுவிக்கப்பட்டதாக உள்ள வரிகளை எப்படி ஏற்க முடியும். அது சர்வதேச பிரச்சினை மத்திய அரசின் தலியீடு இல்லாமல் எப்படி நடக்க முடியும் என்பதால் ஒன்றிய அரசின் முயற்சி என்கிற வார்த்தையை சேர்த்து படித்தது தவறா?

பல இடங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் அமைதியின் சொர்க்கமாக மாநிலம் திகழ்கிறது என்கிற வார்த்தைகள் முதல்வர் மற்றும் டிஜிபியை போற்றும் வகையில் இருந்தது. இந்த வார்த்தைகள் ஆளுநரால் தவிர்க்கப்பட்டது.

“கடந்த 1.5 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிக அந்நிய நேரடி முதலீட்டை தமிழகம் ஈர்த்தது” என்பது ஜனவரி 7 ஆம் தேதி ஆளுநர் உரையில் இருந்தது இதை ஆளுநர் சுட்டிக்காட்டி மாற்றச்சொன்னார். அதை அப்படியே இருந்ததால் தவிர்த்தார்.

உண்மை என்ன? கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழக அரசு ஈர்த்த அந்நிய முதலீடு 2.5 பில்லியன் டாலர்கள் என பெருமையாக பதிவிடப்பட்டுள்ளது. ஆனால் இதே காலக்கட்டத்தில் மகாராஷ்டிரா – 28 பில்லியன் டாலர்கள் மற்றும் கர்நாடகா 25 பில்லியன் டாலர்கள் அந்நிய முதலீட்டை ஈர்த்துள்ளது இதில் பத்தில் ஒருபங்கை ஈர்த்துவிட்டு பெருமையடைவது பிழையான ஒன்று என்பதால் தவிர்த்தார்.

. சட்டசபை உறுப்பினர்கள் ஆளுநரை சுற்றி நின்று உரையை வாசிக்க விடாமல் கோஷமிட்டு கேரோ செய்தனர். இது இதற்கு முன் நடக்காத ஒன்று, ஆளுநர் பேச்சுக்கு எதிராக கேரோ செய்து கோஷம் எழுப்பும் போது சபாநாயகர் தடுக்காமல் அவர்களை வேடிக்கை பார்த்தார்.

6. ஆளுநர் முன்னாள் சபாநாயகர் இருக்கையில் இருக்கும்போது, ஆளுநர் உரையின் தமிழக்க சபாநாயகர் உரைக்குப் பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் மற்றும் அமர்வு ஒத்திவைக்கப்பட வேண்டும். ஆனால் சபை மரபை மீறி முதல்வர் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது சபை விதிகளின்படி இல்லை, அவை மரபை மீறிய செயல்.
சபாநாயகர் சபையின் தலைவராக இருந்தாலும் அரசியலமைப்புச் சட்டத்தின் தலைவராக உள்ள ஆளுநரின் பேச்சை சபைக்குறிப்பிலிருந்து நீக்குவது என்பது சட்ட வல்லுனர்கள் முன் உள்ள தீவிர விவாதப் பொருளாகும். இவ்வாறு ஆளுநர் மாளிகை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.