திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஹரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூா் பகுதிகளில் இயங்கி வந்த 4 ஏடிஎம் மையங்களில் கடந்த 12-ஆம் தேதி அதிகாலை புகுந்த மா்ம கும்பல், ஏ.டி.எம். இயந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சத்தை திருடிச் சென்றது.

இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படையினா் ஆந்திரா, கா்நாடகா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து ஐஜி கண்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவர் ஹரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹரியானாவில் உள்ள கொள்ளையர்களை பிடிக்க அம்மாநில காவல் துறையினர் உதவுகின்றனர்.

ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான நபரிடம் சக கொள்ளையர்கள் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்ளையர்கள் கர்நாடகத்தின் கோலார் பகுதியில் தங்கி இருந்து பின்னர் திருவண்ணாமலை  வந்து கொள்ளையடித்துள்ளனர்.

கொள்ளை நிகழ்வுக்கு பின் மீண்டும் பெங்களூரு சென்று விமானம் மூலம் கொள்ளையர்கள் ஹரியானாவுக்கு தப்பியுள்ளனர் என்று கூறினார்.

மேலும், கொள்ளை நடந்த 4 ஏடிஎம் மையங்களிலும் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் சரியாக பதிவாகவில்லை இதனால் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை காவல் துறையினர் தொடா்ந்து ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்தார்.