தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூர சம்காரணம், நேற்று மாலை விமரிசையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணதிர சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா நடப்பாண்டு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழா கடந்த 25-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் உச்சிகால அபிஷேகம், தீபாராதனைக்கு பின்னர் யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். மாலையில் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவில் சுவாமி-அம்பாள்களுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின்  முக்கிய  நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் நாளான நேற்று மாலை கோவில் கடற்கரையில் வெகு விமரிசையாக  நடைபெற்றது. இதையொட்டி, திருச்செந்தூரில் லட்சணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் மேற்பார்வையில் சுமார் 2,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, நேற்று  அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.

பின்னர், மாலை 4 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்காக கடற்கரையில்  எழுந்தருளினார். அங்கு ம யானை முகம் கொண்ட தாரகாசுரனை சுவாமி ஜெயந்திநாதர் முதலாவதாக  வதம் செய்தார். இரண்டாவதாக, சிங்க முகம் கொண்ட சிங்கமுகாசுரனை சுவாமி ஜெயந்திநாதர் வேலால் வதம் செய்த நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து, தலையை ஆட்டியபடி முருகனுடன் போரிட வந்தான் சூரபத்மன். பின்னர் தன்முகத்தோடு எழுந்தருளிய சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர். மாமரமாகவும், சேவலாகவும் மாறி முருகனுடன் போரிட வந்தான் சூரபத்மன். சூரனை சம்ஹாரம் செய்து சேவற்கொடியாகவும், மயிலாகவும் ஜெயந்திநாதர் ஆட்கொண்டார்.

இந்த விழாவின்போது, கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், அரோகா, முருகனுக்கு அரோகரா, செந்தில் வேலனுக்கு அரோகா என விண்ணதிர கோஷம் எழுப்பினர். கொட்டும் மழையிலும் சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.