சேலம்: பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை – சேலம் இடையிலான முன்பதிவற்ற பயணிகள் சிறப்பு ரயில் சேவை இன்று முதல் நவம்பர் 29ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா காலக்கட்டத்திற்கு கடந்த ஏப்ரல் 1ந்தேதி முதல் சேலம் கோவை இடையே மெமு ரயில் இயக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக, கோவை, திருப்பூர், ஈரோடு பணிக்கு செல்பவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், தற்போது பராமரிப்பு பணி காரணமாக ஒரு மாதம் ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு காவிரி ரயில் நிலையம் முதல் ஈரோடு ரயில் நிலையம் வரையிலான தண்டவாளப் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கோவை – சேலம் இடையிலான முன்பதிவற்ற பயணிகள் சிறப்பு ரயில் சேவை இன்று முதல் வரும் நவம்பர் மாதம் 29ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்து உள்ளது.

வண்டி எண் 06802 கோவை சந்திப்பு – சேலம் சந்திப்பு இடையிலான முன்பதிவற்ற பயணிகள் சிறப்பு ரயில், கோவையில் இருந்து காலை 9.05 மணிக்கு புறப்படும் ரயில் சேவையானது இன்று முதல் நவம்பர் 29ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், மறுமார்க்கத்தில் வண்டி எண் 06803 சேலம் – கோவை இடையிலான முன்பதிவற்ற பயணிகள் சிறப்பு ரயில், சேலத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் ரயில் சேவை இன்று முதல் நவம்பர் 29ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.