சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இரவு 7 மணி வரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தென் தமிழகப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது.

இந்திய வானிலை ஆய்வு மையம் தென்கிழக்கு அரபிக்கடல், அதனையொட்டிய மாலத்தீவு பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்திருந்தது.

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல் ஆகிய 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, கடலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், தென்காசி மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.