சென்னை

வரும் 11 ஆம் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

கடந்த 4 ஆம் தேதியில் இருந்து இன்று வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாகக் கொட்டி தீர்த்த மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இங்குள்ள  பல்வேறு தனியார் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாகக் காட்சி அளிப்பதால் இந்த கல்லூரிகளுக்கு வருகிற 10 ஆம் தேதி வரையும் சில கல்லூரிகளுக்கு 11 ஆம் தேதி வரையும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வரும் மாணவ-மாணவிகள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கல்லூரி அமைந்திருக்கும் பகுதியில் உள்ள வெள்ள பாதிப்பைக் கருத்தில் கொண்டு அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் விடுமுறை அறிவித்துள்ளன.

இந்த விடுமுறை குறித்த அறிவிப்பைக் கல்லூரி நிர்வாகங்கள் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலமாகவும், வாட்ஸ் அப் மூலமாகவும் தெரிவித்துள்ளது.

தவிர பல இடங்களில் தனியார் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் வெள்ள பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கான நிவாரண மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன. எனவே நிவாரண மையங்களாகச் செயல்படும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.