கொச்சி:

மத்திய பிரதேசத்தில் இருந்து கேரளாவுக்கு 1,000 கை துப்பாக்கிகளை கடத்தி வந்திருக்கும் தகவல் உளவுத்துறை மூலம் தெரியவந்துள்ளது.

இது குறித்து மகாராஷ்டிர மாநில போலீசார் கேரள போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து ராணுவத்தின் உளவுப்பிரிவு உதவியுடன் துப்பாக்கிகளை தேடும் பணியில் கேரளா போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால், இதுவரை ஒரு துப்பாக்கியும் சிக்கவில்லை.

சமூக விரோத கும்பல் வசம் இந்த துப்பாக்கிகள் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தீபக்குமார் சகா என்பவர் தலைமையில் 2 பேர் கொச்சியில் தங்கி இருந்தது கேரள போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கடந்த, ஜூலையில் தான் கள்ள துப்பாக்கிகள் வைத்து இருந்ததாக டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள்.

பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள் கொச்சியில் முகாமிட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் சேன்வா என்ற இடத்தில் கள்ள துப்பாக்கி தொழிற்சாலை செயல்படுகிறது. ராணுவம் மற்றும் போலீஸ் பயிற்சி இடங்களிலும், சினிமா படபிடிப்பிலும் டம்மி துப்பாக்கி பயன்படுத்தப்படும்.

இந்த டம்மி துப்பாக்கியை உண்மையான துப்பாக்கியாக மாற்றும் வேலை ம.பி. துப்பாக்கி தொழிற்சாலையில் மேற்கொள்ளப்படுகிறது. அந்த துப்பாக்கிகள் தான் கேரளாவிற்குள் கடத்தி வரப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.