சென்னை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

உலக தமிழர்களால், உலக பொதுமறை தந்த திருவள்ளுவரை ஆராதிக்கும் வகையில் ஜனவரி 15ந்தேதி ஆண்டுதோறும்,  திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. திருவள்ளுவரின் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் திருவள்ளுவரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினார்.