ஆதிசொக்கநாதர் – திருப்பரங்குன்றம்

சிவன் பார்வதிக்குப் பிரணவ மந்திரத்தை உபதேசித்த போது அம்பாளின் மடியில் இருந்த முருகன் அதனைக் கேட்டுக் கொண்டிருந்தார் அந்த மந்திரத்தை குருவிடம் இருந்து முறையாக கற்காமல் மறைமுகமாகக் கேட்டது தவறு என எண்ணிய முருகன் திருப்பரங்குன்றம் திருத் தலத்தில் சிவனை வேண்டி தவம் செய்தார் அவருக்கு ஒரு தைப்பூசத்தன்று சிவன் காட்சி தந்தார்.

இந்த சிவன் சுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே ஆதிசொக்கநாதராக  கோவில் கொண்டு அருளுகிறார். திருப்பரங்குன்றம் செல்பவர்கள் முதலில் இவரை வணங்கிவிட்டுச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம் இவரே இங்குப் பிரதான மூர்த்தி ஆவார்.  ஆனால் அறுபடை முருக தலங்களில் இத்தலமும் ஒன்று என்பதால் பிற்காலத்தில் முருகன் பெயராலேயே இக்கோவில் பெயர்பெற்றது.

அதனால் விழாக்காலங்களில் சிவனுக்கே கொடியேற்றப்படுகிறது.  ஆனால் முருகனே வீதியுலா செல்கிறார் முருகன் சிவனது அம்சமானவர் என்பதால் இவ்வாறு செல்வதாகச் சொல்கிறார்கள்.

அதனால் திருப்பரங்குன்றம் முருகனுக்குச் சோம சுப்பிரமணியர் என்ற பெயரும் உள்ளது.  சோமன் என்பது சிவனைக் குறிக்கும்.கருவறையில் சிவலிங்கத்திற்குப் பின்புறம் சிவன் பார்வதி மற்றும் முருகனுடன் சோமஸ்கந்தர் ஆக இருக்கிறார் இது விசேஷமான அமைப்பாகும்.

துர்க்கை அம்மனுக்குச் சிவன் விமோசனம் தந்தபோது சோமாஸ்கந்தர் ஆகக் காட்சி தந்தாராம் இதன் அடிப்படையில் இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.  சிவலிங்கம் துர்க்கை அம்மனால்  பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பதால் தேவி லிங்கம் என்கின்றனர்.  சுவாமி சாந்தாகாரம் எனும் மருந்து பூசப்பட்டவர் என்பதால் சாம்பிராணி தைலம் மட்டும் பூசி வழிபடுகின்றனர்.  வேதவியாசர் பராசர முனிவர் ஆகியோரும் சுவாமியை வழிபட்டுள்ளனர்.