திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில்
திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் நகரில் திருப்பாதிரிப்புலியூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள, சம்பந்தர், அப்பர் போன்றோரால் பாடல் பெற்ற தலமாகும். 274 சிவாலயங்களில் இது 229வது தேவாரத்தலம் ஆகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நம்நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
இத்தலம் திருப்பாதிரிப்புலியூர் புகைவண்டி நிலையத்தில் இருந்து 0.5 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இது பல்லவ, சோழ காலங்களில் கட்டப்பட்டுள்ளது.
இங்கு சிவன் தான்தோன்றியாய் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றுகிறார் என்று நம்பப்படுகின்றது. அப்பரைக் கல்லிலே கட்டி கடலிலே விட அது மிதந்து இத்தலத்தின் பக்கத்தில் கரைசேர்ந்தது என்பது தொன் நம்பிக்கை (ஐதிகம்). பாதிரி மரத்தின் வடமொழிப்பெயர் பாடலம் என்பதாகும்.
தலப் பெருமை
மகேந்திர வர்ம மன்னன் திருநாவுக்கரசரைக் கல்லில் கட்டிக் கடலில் போட்ட போது கல் தெப்பமாக மாறி திருப்பாதிரிப்புலியூரிலேயே கரை சேர்ந்ததாகக் கூறப்படுகின்றது. இதன் காரணத்தால் இவ்விடம் கரையேறவிட்ட குப்பம் எனவும் அழைக்கப்படுகின்றது. “ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய்” எனும் பதிகத்தைத் திருநாவுக்கரசர் இன்று பாடினார்.
அகத்தியர், வியாக்ரபாதர், மங்கணமுனிவர் , உபமன்னியர், ஆதிராசன் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலம் ஆகும்.
காசியில் உள்ள இறைவனை 16 முறை வணங்குவதும் இத்தலத்தில் ஒரு முறை வணங்குவது இணையானது அதாவது சமனானது எனும் ஒருவித நம்பிக்கை இங்குக் காணப்படுகின்றது.
திருவண்ணாமலையில் 08 முறை வணங்குவதும் சிதம்பரத்தில் 03 முறை வணங்குவதும் இங்கு ஒருமுறை வணங்குவதற்குச் சமனாகும்.
தமிழ்நாட்டில் ஆகம விதிப்படி நிறுவப்பட்ட சிறந்த சிற்பக்கலை நுணுக்கங்களை இக்கோயில் கொண்டுள்ளது.   பள்ளியறை சுவாமி கோயிலில் உள்ளது.  இறைவி, பள்ளியறைக்கு எழுந்தருளுவது இங்குள்ள தனிச்சிறப்பாகும்.
வழிபட்டோர்
இத்திருக்கோவில் வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவர், திருநாவுக்கரசர் போன்றவர்கள் வழிபட்ட திருத்தலம் என்று கூறப்படுகின்றது. புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்றதாக நம்பப்படுகின்றது. இதன் காரணமாகவே இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.